தாழ்வாக இருந்த உயர் மின்னழுத்த கம்பி: மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடும் மகனுக்கு நியாயம் கேட்டு ஆட்சியர் அலுவலகத்தில் பெற்றோர் கண்ணீர்

மின்சாரம் தாக்கி படுகாயமடைந்த தனது மகனுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், அதேபோல் காவல்துறையினர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்ய வேண்டும்

தாழ்வாக இருந்த உயர் மின்னழுத்த கம்பி: மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடும் மகனுக்கு நியாயம் கேட்டு ஆட்சியர் அலுவலகத்தில் பெற்றோர் கண்ணீர்
ஆட்சியர் அலுவலகத்தில் பெற்றோர் கண்ணீர்

நாமக்கல்லில் தாழ்வாக சென்ற உயர் மின்னழுத்த கம்பியால் மின்சாரம் தாக்கி படுகாயமடைந்த தனது மகனுக்கு உரிய இழப்பீடு வழங்க கோரி ஆம்புலன்ஸில் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த பெற்றோர்கள்.

நாமக்கல் மாவட்டம் பரமத்தியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் ராஜலிங்கம். இவரது மகன் அஜய்குமார்(20). கடந்த 09.10.2024 அன்று பரமத்தி அடுத்துள்ள பிள்ளாகளத்தூர் பகுதியில் வசிக்கும் விஜயக்குமார் என்பவரது வீட்டிற்கு சம்பள பணம் வாங்க சென்றதாக கூறப்படுகிறது.

அங்கு அவரது வீட்டின் மாடியில் தாழ்வாக சென்ற உயர் அழுத்த மின்கம்பியில் எதிர்பாராத விதமாக அஜய்குமாரின் தலையில் பட்டு தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். இதனையடுத்து அஜய்குமாரை மீட்ட அக்கம்பக்கத்தினர் பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அஜய்குமாருக்கு தலையில் 25 தையலும் கை மற்றும் கால்களில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த சூழலில், இதுதொடர்பாக பரமத்தி காவல்நிலையத்தில் அஜய்குமாரின் பெற்றோர்கள் புகார் அளித்தனர். ஆனால் புகாரை காவல்துறையினர் ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் இன்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஆம்புலன்ஸில் வந்ந அஜய்குமார் மற்றும் அவரது பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அதில் உயர் மின்னழுத்த கம்பி தாழ்வாக சென்றது தான் விபத்திற்கு காரணம் எனவும் மின்சாரம் தாக்கி படுகாயமடைந்த தனது மகனுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், அதேபோல் காவல்துறையினர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் கேட்டு கொண்டனர்.