காளிப்பட்டி கந்தசாமி கோயிலில் சூரசம்ஹார விழா கோலாகலம்

பக்தர்கள் ‘அரோகரா’, ‘வெற்றிவேல்’, ‘வீரவேல்’ கோஷங்கள் முழக்கம்..

பக்தர்கள் ‘அரோகரா’, ‘வெற்றிவேல்’, ‘வீரவேல்’ கோஷங்கள் முழக்கம்..

விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அருகே இந்துசமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள காளிப்பட்டி கந்தசாமி கோயிலில் சூரசம்ஹாரத் திருவிழா இன்று வெகு கோலாகலமாக நடைபெற்றது.

இவ்விழாவிற்கு இராசிபுரம், காளிப்பட்டி, ஆட்டையாம்பட்டி, மல்லசமுத்திரம், வையப்பமலை, காகாபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காலை முதலே கோயிலில் குவிந்தனர். தொடர்ந்து காலை முதலே முருகனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இதை தொடர்ந்து மாலை சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் கந்தசாமி எழுந்தருள, எதிரில் சூரபத்மனை தூக்கி வைத்தனர். பக்தர்களின் ‘அரோகரா’, ‘வெற்றிவேல்’, ‘வீரவேல்’ கோஷங்கள் முழக்கத்தில் முருகன், சூரபத்மனை சக்திவேல் கொண்டு அழிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்கள், தங்கள் விளை நிலங்களில் விளைந்த பயிர்களை வீசி எரிந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவின் தொடர்ச்சியாக நாளை மயில் வாகனத்தில் கந்தசாமி சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலாவும், இன்று மாலையில் தெய்வானையுடன் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெறும். இரவு மின்னொளியில் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் திருக்கல்யாண கோலத்தில் திருவீதி உலா வரும் கந்தசாமி கடவுள் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். ஊஞ்சல் பாலி உற்சவத்துடன் சூரசம்ஹார விழா நிறைவு பெறும்.