நாடாளுமன்றத்தின் 96 ஆண்டுகால சகாப்தம் முடிவு

வரலாற்றுச் சிறப்புமிக்க நாடாளுமன்ற கட்டடத்திற்கு பிரியாவிடை..

நாடாளுமன்றத்தின் 96 ஆண்டுகால சகாப்தம் முடிவு
வரலாற்றுச் சிறப்புமிக்க நாடாளுமன்ற கட்டடத்திற்கு பிரியாவிடை..

பழைய நாடாளுமன்றத்தின் 96 ஆண்டுகால சகாப்தம் முடிவுக்கு வந்தது.

வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டடத்தின் சுருக்க வரலாறைத் தெரிந்துகொள்ளுங்கள்.

1) இந்த நாடாளுமன்ற கட்டடம் பிரிட்டிஷ் கட்டடக் கலைஞர்களான சர் எட்வின் லுட்யென்ஸ் மற்றும் ஹெர்பர்ட் பேக்கர் ஆகியோரால் 'கவுன்சில் ஹவுஸ்' என்ற பெயரில் வடிவமைக்கப்பட்டது.

2)இதை உருவாக்க ஆறு ஆண்டுகள் (1921-1927) ஆனது. 83 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்தக் கட்டடத்தை 18 ஜனவரி, 1927இல் அப்போதைய கவர்னர் ஜெனரல் லார்ட் இர்வின் திறந்து வைத்தார்.

3) ஆங்கிலேய அரசின் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சில் இந்தக் கட்டடத்தில் செயல்பட்டுவந்தது. இந்த நாடாளுமன்றக் கட்டடம் சுமார் ஆறு ஏக்கர் பரப்பளவு கொண்டது. 27 அடி உயரமுள்ள 144 தூண்கள் இதற்கு முக்கிய வடிவத்தைக் கொடுக்கின்றன.

4) சுதந்திரம் பெற்ற போது கவுன்சில் ஹவுஸ் நாடாளுமன்ற கட்டடமாக மாற்றப்பட்டது. ஆகஸ்ட் 15, 1947 இல், இந்த கட்டடத்தில் தான் இந்தியா ஆட்சி அதிகாரத்தை ஏற்றுக்கொண்டது. இங்கிருந்துதான் பிரதமர் ஜவஹர்லால் நேரு நள்ளிரவில் ‘Tryst with Destiny’ என்ற புகழ்பெற்ற உரையை நிகழ்த்தினார்.

5) சிக்கிம், நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், உத்தரகாண்ட், ஜார்கண்ட், சத்தீஸ்கர், தெலங்கானா போன்ற மாநிலங்கள் இங்கிருந்துதான் உருவாக்கப்பட்டன. மன்னர் மானிய ஒழிப்பு, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பின் 370 மற்றும் 35-ஏ பிரிவு ரத்து போன்ற பெரிய முடிவுகள் இந்தக் கட்டடத்தில்தான் எடுக்கப்பட்டன.

6) ஜிம்மி கார்ட்டர், பராக் ஒபாமா போன்ற வெளிநாட்டுப் பிரமுகர்கள் இந்த நாடாளுமன்றத்தின் கூட்டுச் சபைகளில் உரையாற்றியுள்ளனர். டிசம்பர் 2001ல் இந்த கட்டடம் பயங்கரவாத தாக்குதலுக்கும் உள்ளானது. அந்தத் தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர்.

இந்த நாடாளுமன்ற கட்டடத்தின் கடைசி அமர்வில் இன்று உரையாற்றிய இந்திய பிரதமர் நரேந்திர மோதி இந்தக் கட்டடத்திற்கு பிரியாவிடை கொடுப்பது அனைவருக்கும் உணர்வுப்பூர்வ தருணமாக இருக்கும் என்றார்