சேலத்தில் அடுத்த மாநாடு! நிர்வாகிகள் கூட்டத்தில் ஓ.பி.எஸ். முடிவு!

திருச்சி மாநாட்டை தொடர்ந்து அடுத்ததாக சேலத்தில் ஒரு பிரம்மாண்ட மாநாடு நடத்துவது என ஓ.பன்னீர்செல்வம் அணி முடிவெடுத்துள்ளது.
வரும் ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி மதுரையில் எடப்பாடி பழனிசாமி மாநாடு நடத்தவுள்ள நிலையில் அதற்கு போட்டியாக சேலத்தில் மாநாட்டை நடத்தி பலத்தை காட்டலாம் என ஓ.பி.எஸ்.ஸிடம் பெங்களூர் புகழேந்தி வலியுறுத்தி வந்தார். இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திலும் அது தொடர்பாக பேசியிருக்கிறார்.
இதையடுத்து அடுத்த மாநாட்டை கோவையில் நடத்துவதா சேலத்தில் நடத்துவா என்பது பற்றி ஆலோசிக்கப்பட்டதில் பெரும்பாலான நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியின் ஊரான சேலத்தில் தான் அடுத்த மாநாட்டை நடத்த வேண்டும் என ஓ.பன்னீர்செல்வத்திடம் வலியுறுத்தியுள்ளனர். இதனால் அவரும் நிர்வாகிகள் விருப்பப்படி சேலத்தில் மாநாடு நடத்த கிரீன் சிக்னல் கொடுத்துவிட்டார் போல் தெரிகிறது.
இந்த மாநாடு பொறுப்பாளராக பெங்களூர் புகழேந்தியை ஓ.பன்னீர்செல்வம் முன்னிறுத்தி அவர் வசம் மாநாட்டு பணிகளை ஒப்படைப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது. மதுரையில் எடப்பாடி பழனிசாமி மாநாடு நடத்தும் ஆகஸ்ட் 20ஆம் தேதி அன்றே நாமும் சேலத்தில் மாநாடு நடத்தலாம் என்ற விருப்பத்தை நிர்வாகிகள் தெரிவித்திருக்கின்றனர். ஆனால் ஓ.பன்னீர்செல்வமோ உடனடியாக மாநாடு தேதியை தேர்வு செய்வதை தவிர்த்து தேதி தேர்வை மட்டும் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என விட்டிருக்கிறார்.
சேலத்தில் நடத்தும் மாநாட்டிலாவது சசிகலாவை மேடை ஏற்றிவிட வேண்டும் என்ற அஜெண்டாவோடு இருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். அதேபோல் மனஸ்தாபத்தில் உள்ள சசிகலாவையும், டிடிவி தினகரனையும் தாம் நடத்தும் மாநாடு மூலம் ராசியாக்கிவிட வேண்டும் என்ற முயற்சியிலும் ஓ.பன்னீர்செல்வம் உள்ளார்.