ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் - மகளிர் உரிமைத்தொகை திட்ட சிறப்பு அதிகாரியாக இளம்பகவத் நியமனம்!

புதிய தலைமைச் செயலாளராக ஷிவ்தாஸ் மீனா பொறுப்பேற்றுள்ள நிலையில் முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
திமுக ஆட்சியமைத்து முதலமைச்சராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக இறையன்புவை நியமித்தார். இரண்டு ஆண்டுகள் தலைமைச் செயலாளாராக பணியாற்றிய இறையன்பு நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனா நியமனம் செய்யப்பட்டார். அதன்படி நேற்று அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.
புதிய தலைமைச் செயலாளராக ஷிவ்தாஸ் மீனா பொறுப்பேற்ற நிலையில், முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி உயர்கல்வித்துறை செயலாளராக இருந்த கார்த்திகேயன், இதுவரை தலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா பொறுப்பு வகித்த நகராட்சி நிர்வாகத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
உயர்கல்வித்துறை செயலாளராக கார்த்திக், கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை செயலாளராக மங்கத் ராம் சர்மா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளராக ரீட்டா ஹரிஷ் தக்கார் நியமிக்கப்பட்டுள்ளார்.
டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் - பொது சுகாதாரத்துறை இயக்குநர் அறிவுறுத்தல்
வரும் செப்டம்பர் 15ம் தேதி முதல் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படவுள்ள நிலையில், அத்திட்டத்தின் சிறப்பு அதிகாரியாக இளம்பகவத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவராக உள்ள அர்ச்சனா பட்நாயக்கிற்கு, மருத்துவ பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
கூட்டுறவு சங்க பதிவாளர் சுப்பையனுக்கு, கலைஞர் நூற்றாண்டு விழா சிறப்பு அதிகாரியாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் வருவாய் மற்றும் நிதிப்பிரிவு துணை ஆணையராக ஆனந்த் மோகன் நியமிக்கப்பட்டுள்ளார். மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தின் இணை மேலாண் இயக்குநராக விஷூ மகாஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் நிர்வாக இயக்குனராக அண்ணாதுரையும், தமிழ்நாடு சாலைத்துறை திட்ட இயக்குனராக பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார்.