நாமக்கல்:அடியாட்களுடன் பங்கிற்கு சென்று மிரட்டிய திமுக ஒன்றிய பொறுப்பாளர் | பரபரப்பான சிசிடிவி காட்சி

ஆளுங்கட்சியின் திமுக ஒன்றிய பொறுப்பாளர் டீசல் அடித்து விட்டு பணம் கொடுக்காமல் பங்கு ஊழியர்களிடம், உரிமையாளரிடம் அடியாட்களுடன் வந்து பிரச்சனை செய்த சம்பவம் நாமக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல்:டீசல் அடித்தற்கு பணம் கேட்டதால் பெட்ரோல் பங்க் ஓனருக்கு மிரட்டல் அடியாட்களுடன் பங்கிற்கு சென்று மிரட்டிய திமுக ஒன்றிய பொறுப்பாளர். பரபரப்பான சிசிடிவி காட்சி வெளியானது. பாதுகாப்பு கேட்டு பெட்ரோல் பங்க் ஓனர் எஸ்.பி அலுவலகத்தில் புகார் மனு. நாமக்கல் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் புதன்சந்தையில் கோமதி என்பவர் அம்பாள் பியூல் ஏஜென்சிஸ் என்ற பெயரில் பெட்ரோல் பங்க் நடத்தி வருகின்றார். இவரது பெட்ரோல் பங்கில் விநாயக டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் பாபு என்பவர் இவரது லாரிகளுக்கு தவணை முறையில் டீசல் அடித்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று 22.09.24 காலை பாபுவின் லாரி ஒன்று டீசல் அடிக்க பெட்ரோல் பங்கிற்கு வந்துள்ளது அப்போது பழைய பாக்கி இருப்பதால் டீசல் அடிக்க முடியாது என பங்க் ஊழியர்கள் கூறியுள்ளனர். பணம் செலுத்தி டீசல் பிடித்து கொள்வதாக லாரி ஓட்டுநர் கூறியதையடுத்து பேரலில் டீசல் பிடித்துள்ளனர் அப்போது மீட்டர் மட்டுமே ஓடுகிறது, டீசல் வந்த மாதிரியில்லை என கூறி பங்க் ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளனர். டீசல் அடிப்பதை நிறுத்திய ஊழியர் இதுகுறித்து பங்க் உரிமையாளரிடம் தெரிவித்த நிலையில் அங்கு வந்த கோமதி லாரி ஓனரை வர சொல்லுங்கள் சந்தேகம் இருந்தால் பேரலில் அடித்த டீசலை அளந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக புதுச்சத்திரம் திமுக தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் ஜெயபிரகாஷ் தலைமையில் 20 பேருடன் பெட்ரோல் பங்கிற்கு வந்த அவர் பங்க் ஊழியர்களிடம் தகாத வார்த்தை பேசி தாக்க முற்பட்டனர். அப்போது ஒன்றிய திமுக பொறுப்பாளர் ஜெய்பிரகாஷ் இது என்னுடைய ஒன்றியம், என்னை மீறி ஒன்றும் நடக்காது, நீ எப்படி பங்க் நடத்துற என பார்க்கிறேன் என்று சொல்லி டிப்பர் லாரி, அவருடைய கார் ஆகியவற்றை வைத்து பங்குக்கு யாரும் வர முடியாத அளவிற்கு குறுக்கே போட்டு பிரச்சினையில் ஈடுப்பட்டார். இந்த நிலையில் பங்கு உரிமையாளர் கோமதி இன்று நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தார்.... அந்த மனுவில் புதுச்சத்திரம் தெற்கு திமுக ஒன்றிய பொறுப்பாளர் ஜெயபிரகாஷ் அடியாட்களை கொண்டு மிரட்டியதால் எனது நிறுவனத்திற்கும், எனக்கும் ஆபத்து உள்ளதால் திமுக ஒன்றிய பொறுப்பாளர் ஜெயபிரகாஷ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்துள்ளார். இந்த நிலையில் திமுக ஒன்றிய பொறுப்பாளர் ஜெயபிரகாஷ் அடியார்களை கொண்டு பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் மிரட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ஆளுங்கட்சியின் திமுக ஒன்றிய பொறுப்பாளர் டீசல் அடித்து விட்டு பணம் கொடுக்காமல் பங்கு ஊழியர்களிடம், உரிமையாளரிடம் அடியாட்களுடன் வந்து பிரச்சனை செய்த சம்பவம் நாமக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் குறித்து திமுக ஒன்றிய பொறுப்பாளர் ஜெயபிரகாஷிடம் விளக்கம் கேட்க செல்போனை தொடர்பு கொண்ட போது அழைப்பு எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.