"நாங்க எல்லாம் ரொம்ப நல்லவங்க "அமைச்சர் மதிவேந்தன் பேச்சால் அரங்கமே சிரிப்பலை
மாணவிகளே பயப்படாதீங்க நீங்க கல்விக்கடனை கட்டுலனா "உங்கள கட்டுனவன் கட்டிடுவான்" நாங்க ரொம்ப நல்லவங்க.. சிரிப்பலையை உருவாக்கிய அமைச்சர் மதிவேந்தன்
வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்கள் 59 கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு ரூ.5.03 கோடி மதிப்பில் கல்வி கடனுதவிகளை வழங்கினார்.
மாணவிகளே பயப்படாதீங்க நீங்க கல்விக்கடனை கட்டுலனா "உங்கள கட்டுனவன் கட்டிடுவான்" நாங்க ரொம்ப நல்லவங்க.. சிரிப்பலையை உருவாக்கிய அமைச்சர் மதிவேந்தன்...
திருமணத்திற்கு பின்பு எனது மனைவி கல்விக் கடன் வாங்கியுள்ளதை அறிந்தேன். ஏன் பணம் கட்டவில்லை என கேட்டதற்கு தள்ளுபடி ஆகிவிடும் அதனால் கட்டவில்லை என என் மனைவி பதில் கூறினார்... பிறகு வங்கி அதிகாரிகளை அணுகிய போது நீங்கள் முறையாக கல்வி கடன் கட்டவில்லை என்றால் உங்கள் சிபில் குறைந்து நீங்கள் வேறு எங்கும் கடன் வாங்க முடியாத நிலை உருவாகும் என எச்சரித்த நிலையில் "ஒன் டைம்" செட்டில்மெண்ட் என்ற ஒரு வாய்ப்பு கிடைத்ததால் கல்விக்கடனை நானே கட்டி விட்டேன்.
எனவே மாணவிகளே நீங்கள் கவலைப்பட வேண்டாம் கல்வி கடனை வாங்குங்கள். உங்களை திருமணம் செய்து கொள்பவர் கண்டிப்பாக கட்டிவிடுவார் ஏனென்றால் ஆண்கள் நாங்க எல்லாம் மிகவும் நல்லவர்கள் என கூறியதால் அரங்கம் முழுவதும் சிரிப்பலை உண்டானது "நாங்க எல்லாம் ரொம்ப நல்லவங்க "வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் பேச்சால் அரங்கமே சிரிப்பலை...
நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், பாச்சல், பாவை பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற கல்வி கடன் முகாமில் 59 கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு ரூ.5.03 கோடி மதிப்பில் கல்வி கடனுதவிகளை மாண்புமிகு வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் திரு.பெ.இராமலிங்கம் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் வழங்கினார்.
மாண்புமிகு வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்கள் தெரிவித்ததாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கல்விக்கும், சுகாதாரத்திற்கும் முக்கியத்துவம் வழங்கி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள். குறிப்பாக அனைவரும் கல்வி பயில வேண்டும் என்பதனை அடிப்படை நோக்கமாக கொண்டு கல்வித்துறையில் இந்தியாவில் வேறு எந்த மாநிலங்களிலும் செயல்படுத்தாத திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள். அறிவு பசியை போக்கும் முன் வாயிற்று பசியை போக்கிட வேண்டுமென்ற உன்னத நோக்கத்தில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் மாதம் தோறும் ரூ.1,000/- வழங்கும் புதுமை பெண் திட்டம், இளைஞர்களின் வேலைவாய்ப்பினை உறுதிபடத்திட தங்களது திறன்களை மேம்படுத்திடவும் உயர்கல்வி வழிகாட்டிடவும் நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன். இதன் மூலம் Gross Enrolment Ratio எனப்படும் உயர்கல்வி சேர்க்கை விகிதத்தில் இந்தியாவில் தமிழ்நாடு மாநிலம் முதலிடம் வகிக்கிறது. உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு பொருளாதாரம் தடையாக இருக்க கூடாது என்ற நோக்கத்துடன் இன்றையதினம் நாமக்கல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு மாபெரும் கல்வி கடனுதவி வழங்கும் முகாம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 11 பொதுத்துறை மற்றும் 17 தனியார் வங்கிகள் மூலமாக 1,350 மாணவர்களுக்கு 34 கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, 40 கோடி ரூபாய் மாணவர்களுக்கு கல்வி கடனாக வழங்கப்பட்டுள்ளது. இந்த வருடம் 2,500 மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கபட்டு இதுவரை 585 மாணவர்களுக்கு 16 கோடிக்கான கடன் அனுமதி கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த முகாமில் கலந்து கொண்டு கல்விக் கடனுக்கு விண்ணப்பித்த மாணவ, மாணவியர்களுக்கு கல்வி கடன் வழங்க இன்றையதினமே நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இன்று மட்டும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளில் இருந்து சுமார் 672 மாணவ, மாணவியர்கள் இந்த கல்வி கடன் முகாமில் கலந்து கொண்டு உள்ளனர். இவர்களில் உடனடியாக 59 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.5.03 கோடி மதிப்பில் கல்வி கடன் வழங்கப்படுகிறது. மேலும், மற்ற மாணவ, மாணவியர்களுக்கும் வங்கி கிளைகளின் மூலம் கல்வி கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாண்புமிகு வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்கள் தெரிவித்தார்.