கல்விக் கடன் வழங்க சிறப்பு முகாம் அமைக்க மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை

ராசிபுரம்| மக்கள் | நலக்குழு | மாவட்ட | ஆட்சியரிடம் | கோரிக்கை

கல்விக் கடன் வழங்க சிறப்பு முகாம் அமைக்க மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை
கல்விக் கடன் வழங்க சிறப்பு முகாம் அமைக்க மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை

*இராசிபுரம் பகுதியில் மாணவ மாணவிகளுக்கு கல்விக்கடன் வழங்குவதற்காக, சிறப்பு முகாம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இராசிபுரம் மக்கள் நலக்குழு நிர்வாகிகள் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை:*

இதுகுறித்து, இராசிபுரம் மக்கள் நலக்குழு சார்பில், அதன் தலைவர் பாலசுப்ரமணி, செயலாளர் நல்வினை செல்வன், 
பொருளாளர் முருகன், ஒருங்கிணைப்பாளர் ஜெ. சபீர், கெளவுரவத்தலைவர் ஜெயபிரகாஷ் மற்றும் கல்விக்குழு பொறுப்பாளர் பொறியாளர் பா.மோகன்தாஸ் ஆகியோர்கள் இன்று காலை நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் நேரில் சந்தித்து அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்டம், இராசிபுரத்தில் ஏராளமான பள்ளிகள் உள்ளன. இங்குள்ள பள்ளிகளில், பள்ளிக் கல்வியை முடித்துவிட்டு, உயர்கல்வி பயில்வதற்காக, பல ஏழை எளிய மாணவ, மாணகள் தனியார் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். அவர்கள் கல்விக் கட்டணம் முழுமையாக செலுத்த முடியாத ஏழ்மை நிலையில் உள்ளனர். இதனால் அவர்களுக்கு கல்விக்கடன் கேட்டு, இராசிபுரம் பகுதியில் உள்ள வங்கிகளை பெற்றோர்கள் அனுகினால், வங்கி அதிகாரிகள் அவர்களை அலைக்கழித்து வருகின்றனர். இதனால் பள்ளி மாணவ மாணவிகளின் கல்வி பாதிக்கப்படுகிறது.

உயர்கல்வி பயிலும் ஏழை, எனிய மாணவ மாணவியர், கல்விக்கடனை வங்கியின் மூலம் எளிமையான முறையில் பெறுவதற்கு, மாவட்ட நிர்வாகத்தின் மூலம், வங்கிகளின் சார்பில், கல்விக்கடன் வழங்கும் சிறப்பு முகாம், மாநிலத்தின் பிற பகுதிகளில் நடைபெறுவதைப் போல, இராசிபுரம் நகரிலும் நடத்திக் கொடுத்து, மாணவ மாணவியர் எளிதாகக் கல்விக்கடன் பெற்று, உயர் கல்வி படிக்க உதவ வேண்டும் என்று, அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.


உயர்திரு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் மக்கள் நலக்குழுவின் நிர்வாகிகளின் கோரிக்கையை கவனமாகக் கேட்டறிந்தார்.
 இம்மாதம் 22 ஆம் தேதி வாக்கில் நாமக்கல் நகரில் மாவட்ட அளவில் வங்கி கடன் வழங்கும் முகாம் நடத்த ஏற்பாடு செய்ய இருப்பதாகவும், இது சம்பந்தமாக முறையான அறிவிப்பும் செய்தித்தாள் விளம்பரமும் அளிப்பதாகவும்,ஏழை எளிய மாணவர்கள் வங்கி கடன் பெற அனைத்து வங்கிகளின் மூலம் ஏற்பாடு செய்து தருவதாக தெரிவித்தார்கள்.