கரூரில் இன்று பாஜகவின் மாற்றத்திற்கான மாநாடு!

அண்ணாமலையின் சொந்த ஊரான கரூரில் பாஜகவின் மாற்றத்திற்கான மாநாடு இன்று நடைபெறுகிறது. மாநாட்டுக்கான ஏற்பாடுகளை பிரம்மாண்டமாக செய்திருக்கும் பாஜகவினர் கூட்டத்தை பெரியளவில் திரட்ட திட்டமிட்டுள்ளனர்.
2024 நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கான பணிகளை பாஜக முதல் ஆளாக தொடங்கிவிட்டது. திமுக, அதிமுகவை காட்டிலும் இப்போதே பொதுக்கூட்டங்கள், ஆலோசனைக் கூட்டங்கள் என பரபரப்பு காட்டி வருகிறார் அண்ணாமலை. லண்டனில் இருந்து தமிழகம் திரும்பிய கையோடு ஊர் ஊராக பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு பேசி வருகிறார் அண்ணாமலை.
அந்த வகையில் நேற்று ஈரோட்டில் கலந்துகொண்ட அவர், இன்று அவரது சொந்த ஊரான கரூரில் நடைபெறும் மாற்றத்திற்கான மாநாட்டில் கலந்துகொள்கிறார். இந்த மாநாட்டு பணிகளை முன்னாள் எம்.பி.யும், பாஜக மாநில துணை தலைவருமான கே.பி.ராமலிங்கம் கவனித்து வருகிறார். கரூரில் முகாமிட்டு அண்ணாமலையின் மனதை குளிர்விக்கும் வகையில் பிரம்மாண்ட முன்னேற்பாடுகளை செய்து வருகிறார்.
மாநாட்டிற்கு திமுகவுக்கு இணையாக ஆட்களை திரட்டி வரும் பொறுப்பை பாஜக மாவட்டத் தலைவர் செந்தில்நாதன் ஏற்றிருக்கிறார். மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் பேருந்துகள் அனுப்பி ஆட்களை அழைத்து வரவுள்ளார். மற்ற ஊரை காட்டிலும் கரூர் தனது சொந்த மாவட்டம் என்பதால் கூட்டம் சற்றும் அதிகம் இருக்க வேண்டும் என விரும்பியிருக்கிறார் அண்ணாமலை.இதனிடையே கரூரில் முகாமிட்டு இப்பணிகளை கவனித்து வரும் கே.பி.ராமலிங்கம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், செந்டில்பாலாஜியை போலவே திமுக அமைச்சர்கள் பலரும் இனி வரிசையாக சிறைக்கு செல்வார்கள் என்றும் அப்படி அவர்கள் செல்ல மறுத்தால் மருத்துவமனையில் படுப்பார்கள் எனவும் விமர்சித்தார்.