செவ்வாய்க்கிழமை திருக்கோவில் தரிசனம் | அருள்மிகு உஜ்ஜைனி காளியம்மன் திருக்கோயில்
இத்தல அம்பிகை அர்த்தநாரீஸ்வரர் கோலத்தில் ஒரு மார்பு இல்லாமல் காட்சி தருகிறாள்

செவ்வாய்க்கிழமை திருக்கோவில் தரிசனம்- அருள்மிகு உஜ்ஜைனி காளியம்மன் திருக்கோயில்.
இந்த கோயில் எங்கு உள்ளது?
திருச்சி மாவட்டத்தில் உள்ள மாகாளிக்குடி என்னும் ஊரில் அருள்மிகு உஜ்ஜைனி காளியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?
திருச்சியில் இருந்து சுமார் 17 கி.மீ தொலைவில் மாகாளிக்குடி என்னும் ஊர் உள்ளது. மாகாளிக்குடியில் இருந்து இக்கோயிலுக்கு செல்ல பேருந்து வசதிகள் உள்ளன.
இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?
இத்தல அம்பிகை அர்த்தநாரீஸ்வரர் கோலத்தில் ஒரு மார்பு இல்லாமல் காட்சி தருகிறாள்.
பொதுவாக அம்மனுக்கு இரண்டு, நான்கு, எட்டு என்ற விதத்தில் கைகள் இருக்கும். ஆனால் ஒற்றைப்படையாக மூன்று கைகள் உள்ள அம்மன் இங்கு மட்டுமே இருப்பது மிகவும் சிறப்பம்சமாகும். பொதுவாக சிவன் கோயில்களில் மட்டுமே மூலஸ்தான விமானத்தின் மீது ஏக கலசம் (ஒற்றை கலசம்) இருக்கும். ஆனால் இந்த அம்பாள் கோயிலிலும் ஏக கலசம் அமைந்துள்ளது மிகவும் வித்தியாசமான ஒன்றாகும்.
வேறென்ன சிறப்பு?
சுற்றுப் பிரகாரத்தில் புன்னை மரத்தில் கட்டிய கிருஷ்ணனின் தவழும் நிலையில் உள்ள சிற்பம் தனிச்சன்னதியில் அமைந்துள்ளது. இங்குள்ள கிருஷ்ணனுக்கு மொட்டை அடிக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் அய்யனார் பூர்ண புஷ்கலையுடன் தனிச்சன்னதியில் யானை வாகனத்துடன் அருள்பாலிக்கிறார். காமாட்சி அம்மன், இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி ஆகியோர் கோயிலின் சுற்றுப்பிரகார சுவர்களில் சிலை வடிவில் காட்சி தருகின்றனர். இத்தலத்தில் சீனிவாசப் பெருமாள், லட்சுமி தாயாருடன் எழுந்தருளி காட்சி தருகிறார். மதுரையின் காவல் தெய்வமான மதுரை வீரன் இங்கு பொம்மி மற்றும் வெள்ளையம்மாளுடன் அருள்பாலிக்கிறார்.
என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?
நவராத்திரி பண்டிகை, சித்திரை மாத அக்னி நட்சத்திரவிழா ஆகியவை இத்தலத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பௌர்ணமி, அமாவாசை, மகர சங்கராந்தி, தைப்பூசம், மகா சிவராத்திரி, பங்குனி திருவிழா, அஷ்டமி ஆகிய நாட்களில் விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன.
எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?
திருமணத்தடை நீங்க, குழந்தை பாக்கியம் கிடைக்க, கல்வியில் சிறந்து விளங்க இத்தல அம்மனை பிரார்த்தனை செய்கின்றனர்.
இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?
இக்கோயிலில் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் அம்மனுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் சாற்றியும் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.